காலம் ஒருநாள் மாறும்.
வணக்கம் என் உறவுகளே!
கால மாற்றத்தின் முடிவுறாத நிகழ்வின் ஊழித்தாண்டவம் எமது நிலங்களை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. மழை, வெள்ளம், இடப்பெயர்வென எமது நிலம் நீரால் நிறைந்து கிடக்கின்றது. நிவாரணத்துக்காய் மக்கள் அலைந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும். வீட்டுத் திட்டங்களும் மக்களைப்பார்த்து எக்காளமாய்க் கூச்சல் போட்டுச் சிரிக்கின்றன. எமது பிரதேசங்களில் அலைந்து வருகின்ற மனித ஓலங்கள் இன்னும் முடிவறாத பயணங்களில் துயரம் சூழ பயணித்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் வாசல்கள் இருண்டு போய்க்கிடக்கின்றன. பாதுகாப்பின் அடையாளங்கள் எங்கள் நிலங்களைக் கிளறி அடிக்கடி பயமுறுத்துகின்றன.
மௌனமாக எம் மன இடுக்குகளில் பதியப்பட்டுள்ள உயிரின் உணர்வுகளோடு ஒன்றிப்போக வாழ்வு நகர்கிறது. இமைப்பொழுதிலும் ரணமாகும் உயிரின் நிதர்சனத்தை உணர்ந்தவர்களாக எங்களின் வாழ்வு மழைநீருடன் கரைந்து கொண்டி ருக்கிறது.
நீண்டதும் கடினமானதுமான இழந்த வாழ்வை மீட்டெடுப்பதற்கான எமது போராட்டத்தில் நாம் சந்தித்து வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாட்கள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் அத்திபாரக் கற்களாக இருக்கிறன.
ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராஜ தந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் அரசு கேள்விக் குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக வும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.
போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்க வெண்டிய பொறுப்பு தமிழ்பேசும் தலைமைகளிடம் இருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான இந்த இரண்டரை ஆண்டுகளில் எமது உறவுகளின் அரசியல் தீர்வுக் கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே எமது அரசாங்கம் முனைவது கடந்த நாட்களில் ஏற்பட்டு வருகின்ற நிகழ்வுகளின் கசப்பான நினைவுகளிலி ருந்து தெரிகின்றது.
ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக் கப்படாத நிலையில் மேலும்பல வாழ்விடங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் எமது உறவுகள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழர் வாழ் விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு பரப்பப்படுகிறது. அசாதாரண சம்பவங் களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலை யிலுங் கூட மக்கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதி கரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்ட நிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது.
எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீள வாழ்வதற்காக முயற்சி செய்வோம். எமது மக்களின் மனங்களில் அமைதி நிலவுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் ஏற்பட்ட முரண்பட்டநிலை நீங்கவேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை செய்யவேண்டும். யுத்தநிலை முடிந்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அமைதியாக வாழ்க்கையைக் கொண்டு போவதற்காக முயற்சிக்கின்றார்கள். இருந்தும் அது முடியவில்லை. இதுவரையும் எந்த அரசியல் தீர்வையும் அரசு முன்வைக்க வில்லை. எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
நிறையவே மக்களின் எதிர்பார்ப்புக்கள். நினைக்கவே முடியாத ஏமாற்றங்கள் என மனதில் கனதி யுடன் எங்களின் காலம் பயணிக்கிறது. அவர்களின் அவலங்கள் மறையவேண்டும். ஏக்கங்கள் தீரவேண்டும் எமது இளைய சமுதாயம் மக்களின் காவலர்களாக சமூகசிந்தனையுடையவர்களாக நினைவுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாக மாற வேண்டும். காலம் ஒருநாள் மாறும்.
உறவுகளின் கனவுகள் நிச்சயமாய் இப்பூமியில் பூக்கும் என்ற நம்பிக்கையுடன் கடைசி இதழில் கனத்த மனதுடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
ஆசிரியர்
28.11.2011
No comments:
Post a Comment